சிறுமலரைப் பறிப்பதென எண்ணியே துவங்கியது
கிழக்கின் ஆரஞ்சுப் பழத்தைப் பறித்துவிடும் பேராசை
வானேகும் மலையின் சாய்மானத்தில்
முட்டி வலிக்க வலிக்க ஏறத்தான் வேண்டியிருக்கிறது
மெத்தென்ற புற்பாதமோ
நிழல் ஆசியோ
சுனைக் கருணையோ
எதையும் நுகரவிடாமல்
இழுத்தோடும் மழைப்பெருக்கென
புரவியை முடுக்குகிறது காலம்
கணிக்கவியலா காற்றின் திசையில்
உருமாறிய மலர் உருப்பெருங்கனியாய் கனக்க
உயிர்க்காம்பை இறுக்கி முகட்டில் நிமிர்ந்தால்
அந்திமக் கடலில் பழுத்து வீழ்கிறது
வாழ்வின் ஆரஞ்சு